- கோவிட் பின்னரான புதிய பொதுமயமாக்கலின் கீழ் கட்டுநாயக்க விமான நிலையத்தின் நடவடிக்கைகளை நெறிப்படுத்துவதற்கு தொடர்புடைய அனைத்து நிறுவனங்களாலும் துரிதப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த வேலைத்திட்டம்
- கோவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான திட்டங்கள்
- பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்க விமான நிலையத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட நிர்வாகக் குழு
கோவிட் பின்னரான புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயற்பாடுகளை நெறிப்படுத்துவதற்கான இணைந்த வேலைத்திட்டம் தயாரிக்கப்படுகின்றது. விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம், சுகாதாரத்துறை மற்றும் சுற்றுலாத்துறை ஆகியன இணைந்து இந்த கூட்டு முயற்சிகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (22) அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர்கள் உட்பட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை குறைப்பதே இதன் நோக்கமாகும்.
கோவிட் தொற்றின் பின்னர் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய சாதாரணமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டின் எதிர்காலம் தொடர்பாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (22) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தலைமையில் கூட்டம் நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, விமான சேவை மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க, வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன மற்றும் விமான நிலையத்தில் குடிவரவு சுங்கம், சுகாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, விமான நிலையத்தின் அனைத்து பிரிவுகளையும் ஒருங்கிணைப்பதன் மூலம் பயணிகளுக்கான இடையூறுகளை குறைக்க முடியும் என்றார். விமான நிலையத்தின் தலைவர் தலைமையில் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய கூட்டு முகாமைத்துவக் குழு ஒன்று கூடி இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டுமென அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு கருமபீடங்களில் ஏற்படும் தாமதங்கள் தொடர்பில் முதலில் கவனம் செலுத்தப்பட்டது. விமான நிலையத்தில் அவசர நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஒப்புக்கொண்டார். சுற்றுலாப்பயணிகள், முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்காக விசேட குடிவரவு கருமபீடங்களை அறிமுகப்படுத்துமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பரிந்துரைத்தார். குடிவரவு அதிகாரிகளும் இதற்கு ஒப்புக்கொண்டனர். நவீன தொழில்நுட்பத்தின் அறிமுகத்துடன், வருகை முனையத்தில் குடிவரவு கருமபீடங்களின் எண்ணிக்கை 25 இல் இருந்து 31 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது மற்றும் குடியகல்வு சாளரங்களின் எண்ணிக்கை 18 இல் இருந்து 23 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாளாந்த நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதங்கள் தொடர்பிலான நீண்ட கலந்துரையாடலின்போது, கோவிட் தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள புதிய இயல்புநிலைப்படுத்தல் வேலைத்திட்டம் காரணமாக இந்த பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் தலைவர் அசோக் பத்திரன வலியுறுத்தினார். இப்பிரச்சினைகளை விரைவாகத் தீர்ப்பதற்கும் தலைவர் ஒப்புக்கொண்டார். வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக வெளியேறும் மற்றும் வெளிநாடுகளிலிருந்து திரும்பிவரும் இலங்கையர்கள் தங்கு தடையின்றி விமான நிலையத்தில் தமது கடமைகளை மேற்கொள்வதற்காக விமான நிலையத்தில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை அமைக்க வேண்டியதன் அவசியத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன வலியுறுத்தினார். அதற்கான வசதியை பெற்றுக் கொடுக்கலாமென விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரையின் பேரில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுகாதார அறிக்கைகளை விரைவாக சேகரிக்கும் நடவடிக்கைகள் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்டதுடன் அதன் முன்னேற்றமும் மீளாய்வு செய்யப்பட்டது. தாமதத்தை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார மற்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக தேவையான எண்ணிக்கையில் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் நாமல் ராஜபக்ச, அனைத்து நடவடிக்கைகளுக்கும் கோவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது குறித்து அரசாங்கம் தற்போது பரிசீலித்து வருவதாக வலியுறுத்தியதோடு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் சுகாதாரத்துறை கொள்கை ரீதியான தீர்மானமொன்றை எடுக்க வேண்டுமெனவும், இது தொடர்பில் சட்டமா அதிபர் விளக்கமளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கோவிட் தொற்றுநோயைத் தொடர்ந்து பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் மூலம் தினசரி பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், விமான நிலையத்தில் நாளாந்த பயணிகளின் எண்ணிக்கை 12,000ஐ தாண்டியுள்ளது.